கடையம், ஜன.21: ஆழ்வார்குறிச்சியில் சிவசைலம் பரமகல்யாணி அம்பாள் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடந்தது. ஆழ்வார்குறிச்சி சிவசைலம் பரமகல்யாணி கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 9ம்தேதி கால்நாட்டுதல் வைபவத்துடன் தொடங்கியது. தெப்பத்திருவிழாவை முன்னிட்டு சுவாமி,அம்பாள் வெள்ளிச் சப்பரத்தில் ஆழ்வார் குறிச்சி தர்மபுரம் மடத்திற்கு எழுந்தருளினர். தொடர்ந்து உச்சிகால பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு சுவாமி,அம்பாள் கேடயத்தில் தெப்பத்திற்கு எழுந்தருளி தெப்பத்தில் 11முறை வலம் வந்தனர். இதையடுத்து திருக்குளம் வீதிவலம் வரும்போது பெரியதளவாய் மாடசாமிக்கு காட்சியளித்தலும், தீபாராதனையும் நடந்தது. நேற்று காலை சுவாமி,அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா,ருத்ர ஹோமம், ருத்ர ஏகாதசி அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதையடுத்து சுவாமி அம்பாள் வெள்ளி சப்பரத்தில் சிவசைலம் எழுந்தருளினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகர வியாபாரிகள் சங்கத்தினர் செய்திருந்தனர். தெப்பத் திருவிழாவில் ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், சிவசைலம், பொட்டல்புதூர், கடையம், பாப்பான்குளம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர்.