×

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 வாலிபர் பலி


சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம் கிராமம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(35), கழிவுநீர் அகற்றும் டேங்கர் லாரி வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி தீபா(30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ராஜேஷ் மற்றும் மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த ஏழுமலை(35) ஆகியோர் முடிச்சூர் அருகே வரதராஜபுரம் பி.டி.சி., குடியிருப்பு பகுதியில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை நேற்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தொட்டியில் இருந்த கழிவுநீரை மோட்டார் மூலம் லாரியில் நிரப்பி லாரியை அனுப்பினர். பின்னர், தொட்டியில் கடைசியாக தேங்கி உள்ள கழிவுநீரை அகற்ற, ராஜேஷ் தொட்டிக்குள் இறங்கினார். அப்போது, விஷவாயு தாக்கியதால் மயங்கி கூச்சலிட்டார். அவரை மீட்க இறங்கிய ஏழுமலையையும் விஷவாயு தாக்கியது. இதில், இருவரும் மயங்கி தொட்டியின் உள்ளே விழுந்து மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த மணிமங்கலம் போலீசார் மற்றும் தாம்பரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...