உத்தமபாளையம், ஜன. 20: உத்தமபாளையம் சப்-டிவிசனில் அடங்கி உள்ள உத்தமபாளையம், கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, என்.டி.பட்டி, ராயப்பன்பட்டி, ஓடைப்பட்டி, அனுமந்தன்பட்டி என பல்வேறு ஊர்களில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடக்கிறது. இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கஞ்சா போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகி வருகின்றனர். உத்தமபாளையம் பகுதியில் பல்வேறு இடங்களில் மறைத்து வைத்து போதைப்பொருட்களை விற்பனை செய்யும் அளவிற்கு சமூக சீர்கேடு நடக்கிறது. இதனால், இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்க்கையையும் குடும்பத்தையும் இழந்து மிகப்பெரிய சமூக விரோதிகளாகும் நிலை உருவாகுகிறது.எனவே, தேனி மாவட்ட எஸ்.பி, தனிப்படை அமைத்து, கஞ்சா, போதை ஊசி விற்பனை கும்பலை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.