வலங்கைமான், ஜன.11: கொரனா தொற்று பரவலின் காரணமாக தமிழக அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனாதொற்றுக் காலத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் கல்வி பாதித்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இணைய வழியிலும் தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டன. ஆனால் அனைவரும் இந்த திட்டத்தில் பயனடைய முடியாத நிலை ஏற்பட்டது. இணைய வசதி, செல்போன் இல்லை, தொலைக்காட்சி இல்லை என்று கூறி பலர் பாடங்களை கற்பதில் சிக்கல் நீடித்தது. இந்த நிலையில் பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஆய்வு செய்த கல்வியாளர்களும், யுனெஸ்கோ உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளும், தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலுள்ள வல்லுநர்களும் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மூலமாக, முழுவதும் மாநில அரசின் நிதியில் தேடிக் கல்வி என்ற திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.