தஞ்சை, ஜன.11: தஞ்சாவூர் மற்றும் திருக்காட்டுப்பள்ளி உழவர் சந்தைகள் மற்றும் 25 மெ.டன் கொள்ளளவுள்ள குளிர் பதன கிடங்கினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வில் உழவர் சந்தைகளின் காய்கறிகளின் விலை நிலவரம், காய்கறிகளின் வரத்து, விவசாயிகளின் வருகை, நுகர்வோரின் வருகை ஆகியவை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் உழவர் சந்தைகளில் வணிகம் செய்யும் விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் ஆகியோர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். மேலும் உழவர் சந்தைகளில் காய்கறிகள் மற்றும் பழங்கள் மற்றும் நுகர்வோர்கள் வரத்தினை அதிகரிக்க ஆலோசனைகள் வழங்கினார். விவசாயிகள் உழவர் சந்தைகளின் அருகாமையில் மற்றும் உழவர் சந்தைகளுக்கு வெளியில் செயல்படும் தனியார்களால் நடத்தப்படும் காய்கறி கடைகளை அப்புறப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.
மேலும் உழவர் சந்தைகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளின் படி செயல்படுகிறது என்பதனை உறுதி செய்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடி க்குமாறு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வலியுறுத்தி கூறினார். தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல் பட்டுவரும் 5 உழவர் சந்தைகளில் மொத்தம் ரூ.13 லட்சம் மதிப்புள்ள 34.6 டன் அளவுள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் 241 விவசாயிகள் மூலம் வியாபாரம் செய்யப்பட்டது. மேலும் 6519 நுகர்வோர்கள் பயனடைந்தனர்.
இந்நிகழ்வில் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ஜெய்ஜிபால். வேளாண்மை அலுவலர் சிவகாமி, கண்காணிப்பாளர் முருகானந்தம் மற்றும் வேளாண்மை உதவி அலுவலர்கள் அமரேசன் மற்றும் மோனிசா ஆகியோர் உடனிருந்தனர்.