நாகை, ஜன.11: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை குடும்ப நல சங்கம் சார்பில் நாகை கலெக்டர் அலுவலகத்தில் குடும்பநல கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட ஆண் பயனாளிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்தார். திட்ட இயக்குநர் பெரியசாமி, டிஆர்ஓ ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை மாவட்டத்தில் நவீன வாசக்டமி தினத்தை முன்னிட்டு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நடந்த முகாம்களில் கலந்துக்கொண்டு கருத்தடை சிகிச்சை செய்த 50 ஆண் பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரமும், தாய் காக்கும் திட்டத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்துக்கொண்ட 7 தாய்மார்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும் ஊக்கத் தொகை ஆகியவற்றை வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் வட்டார அளவில் அதிக பிரசவம் பார்த்து சிறப்பாக பணிபுரிந்தமைக்காக தலைஞாயிறு மருத்துவ குழுவிற்கு பாராட்டுச் சான்று, செவிலியர், களப்பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்று, மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டுச்சான்று ஆகியவற்றை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார். நாகை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஸ்வநாதன், குடும்பநல துணை இயக்குநர் ஜோஸ்பின்அமுதா, மாவட்ட விரிவாக்க கல்வி அலுவலர் சாந்தி, இணை இயக்குநர் நலப் பணிகள் ராணி, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.