×

(தி.மலை) 6,807 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார் திருவண்ணாமலை மாவட்டத்தில்


திருவண்ணாமலை, ஜன.11: திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள், சுகாதார துறையினர் மற்றும் 60வயதுக்கு மேற்பட்டவர்கள் என 6,807 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் பா.முருகேஷ் நேற்று தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது. மேலும், பொதுமக்கள் தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகளுக்கு 3-வதாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. அதையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்களப்பணியாளர்கள், சுகாதார மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள் என 6,807 நபர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதிவாய்ந்தவர்கள். இதில் 1,864 முன்களப்பணியாளர்கள், 3,703 சுகாதார பணியாளர்கள் மற்றும் 1,240 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள்.

இவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியினை நேற்று திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் பா.முருகேஷ் தொடங்கிவைத்து பார்வையிட்டார். இதில், வேளாண் துணை இயக்குநர்(வணிகம்)ஹரகுமார், சுகாதரா பணிகள் துணை இயக்குநர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 99 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 2 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடையவர்கள் ஆவார்கள். அதாவது, முதல் மற்றும் 2வது டோஸ் எந்தவகை தடுப்பூசி செலுத்திக்கொண்டனரோ அந்த தடுப்பூசியே பூஸ்டர் டோஸ் ஆக போடப்படும் என சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

Tags : Thiruvannamalai district ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...