பரமக்குடி,ஜன.9: தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, கொரோனா பரவல் மூலமாக தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பரமக்குடியில் செயல்படும் அரசு கலைக்கல்லூரி தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில் 150 படுக்கை வசதிகளுடன் இந்த நிலையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை கலெக்டர் சங்கர்லால் குமாவத் ஆய்வு செய்தார். அங்கு நோயாளிகள் தங்குவதற்குரிய வசதிகள் மற்றும் படுக்கை வசதிகள் குறித்து மருத்துவ அதிகாரிடம் கலந்து ஆலோசித்தார். இதில் கோட்டாட்சியர் முருகன், தாசில்தார் தமீம் ராஜா, மருத்துவ இணை இயக்குனர் ரவீந்திரன், கல்லூரி முதல்வர்(பொ) கணேசன் மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடன் இருந்தனர்.