பண்ருட்டி, ஜன. 9: பண்ருட்டி காந்தி சாலையில் நூர்முகமதுஷா அவுலியா தர்கா உள்ளது. கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்பின்படி வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் மத வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தர்காவில் விதிகளின்படி கேட்டில் பூட்டு போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதிய வேலையில் எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்த ஆரூன்ரஷீத்(35) என்பவர் தர்கா கேட் அருகில் வந்து கேட்டை திறக்குமாறு சத்தம் போட்டுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர் நிஜாம் கொரோனா காலம் என்பதால் திறக்க கூடாது என கூறியுள்ளார். இதனை ஏற்காத ஆரூன்ரஷித் அவரை ஆபாசமாக திட்டி கேட்டை திறக்க முயன்றதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனை அறிந்த தர்கா நிர்வாக குழுவினர் சம்பவ இடம் விரைந்து சென்று காயமடைந்த காவலரை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, தர்கா நிர்வாக அலுவலர் அப்துல்லா பண்ருட்டி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஆரூன்ரஷீத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.