கடலூர், ஜன. 9: டாஸ்மாக் செயல்படும் பணி நேரத்தை மாற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கடலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனாவின் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்களை காக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எல்லாத்துறைகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதோடு, பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் செயல்படும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. டாஸ்மாக் பணியாளர்கள் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளவர்களாவர்.
தற்போது, டாஸ்மாக் செயல்படும் நேரம் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணியாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இரவு 10 மணிக்கு கடையை அடைத்து விட்டு கணக்குகளை முடித்துக் கொண்டு டாஸ்மாக் பணியாளர்கள் வீடு திரும்பும் போது பல்வேறு வகையான தாக்குதல் மற்றும் கொள்ளையடித்தலுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, தமிழக அரசு டாஸ்மாக் செயல்படும் நேரத்தை மீண்டும் காலை 10 மணி முதல் இரவு 8 மணியாக குறைக்க வேண்டும் என்றார். அப்போது சங்கத்தின் மாநில தலைவர் சரவணன், நிர்வாகிகள் முத்துக்குமார், மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.