×

கொரோனா, ஒமிக்ரான் தொற்று பரவல் எதிரொலி பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் மூடல்: வேப்பமரத்தை சுற்றி வணங்கி சென்ற பக்தர்கள்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக வெள்ளிக்கிழமை மூடப்பட்டதால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் பின்புறம் உள்ள வேப்பமரத்தை சுற்றி வணங்கிவிட்டு சென்றனர். பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடித்திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 16 அல்லது 17ம் தேதி தொடங்கும். இந்த விழா 10 வாரங்கள் நடைபெறும். அப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்குவார்கள்.

பின்னர், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்தும், ஆடு, கோழிகளை பலியிட்டும் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள். இந்நிலையில், கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக 7ம் தேதி (நேற்று) முதல் வரும் 20ம் தேதி வரை கோயில் வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் மூடப்பட்டு இருக்கும். இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலுக்கு உள்ளே செல்லமுடியவில்லை. இதனால், கோயில் பின்புறம் உள்ள வேப்பமரத்திலும், புற்று பகுதிகளிலும் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.  இதேபோன்று, சின்னம்பேடு சிறுவாபுரி முருகன் கோயிலும் வரும் 20ம் தேதி முதல் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் மூடப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Bhavani Amman Temple ,
× RELATED பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை