தக்கலை, ஜன.7: குமரியில் அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் மீது ேபாலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இருப்பினும் இந்த பிரச்னை தீர்ந்த பாடில்லை. இந்தநிலையில் தக்கலை போலீஸ் எஸ்ஐ அருளப்பன் மற்றும் போலீசார் இருதினங்களுக்கு முன் நள்ளிரவு முதல் அதிகாலை வரை தக்கலை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 10 டாரஸ் லாரிகள் அதிக லோடுடன் கனிம வளங்களை ஏற்றி கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த லாரிகளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. களியல்: களியல் அருகே கிராம அலுவலர் மற்றும் அதிகாரிகள் கனரக வாகனங்களை சோதனை செய்தனர். அதில் ஒரு லாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 4 டன் அதிக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது. அதேபோல் செங்கவிளை, கொல்லங்கோடு பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்காக பாஸ் வாங்கி விட்டு, களியல் நெட்டா வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதும் தெரியவந்தது. அவ்வாறு வந்த சில லாரிகளை மடக்கி அருமனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். புலியூர்சாலை செக்போஸ்ட் போலீசாரும் 20 க்கும் அதிகமான லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.