தா.பழூர்,ஜன.5: ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள கோழி பண்ணையில் துறையூரை சேர்ந்த கவுதம் (25). வேலை பார்த்து வந்தார். கடந்த 2ம் தேதி வேலை முடித்து நண்பர்களுடன் மதனத்தூர் கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்கு சென்றுள்ளனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் நீச்சல் தெரியாத காரணத்தினாலும் நண்பர்கள் கண் முன்னே கவுதம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். கடந்த இரண்டு நாட்களாக ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை அலுவலர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தா.பழூர் காவல்துறையினர் கொள்ளிடம் ஆற்றில் காணாமல்போன கவுதமை ரப்பர் படகு மூலமும், பாதுகாப்பு உடை அணிந்து கரை ஓரங்களிலும் தீவிரமாக தேடி வந்தனர். மூன்றாவது நாளான நேற்று காலை வாழைக்குறிச்சி கொள்ளிடம் கரை வாட்டர் டேங் அருகில் அவரது உடல் மிதந்தது. அதை பார்த்த அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் தா.பழூர் சப்.இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் ஆகியோர் கவுதம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.