பெரம்பலூர்,ஜன.5: பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நூலகம் மற்றும் காவலர் குழந்தைகள் காப்பகத்தை எஸ்பி மணி திறந்து வைத்தார். பெரம்பலூர் அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் ஆயுதப்படை வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் வசித்து வரும் காவலர்களின் குழந்தைகள், காவலர்களின் பணியின் போது வீட்டில் தனிமையாக இருப்பதை உணர்ந்த பெரம்பலூர் மாவட்ட எஸ்பி மணி, காவலர்களின் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆயுதப்படை வளாகத்தில் காவலர் குழந்தைகள் காப்பகத்தை துவங்கி வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது பேசிய எஸ்பி மணி, ஒரு புத்தகம் தான் சிறந்த மனிதனை உருவாக்கும். அனைவரும் பணிகள் இல்லாத நேரங்களில் நூலகத்திற்கு வந்தும், நூலகத்தில் உறுப்பினராகி நூல்களை வாங்கி சென்றும் பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.
உலக விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறி ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களின் அறிவு பசிக்கு விருந்தளிக்கும் வகையில், பல்வேறு வகையான நாவல்கள், தொடர் கதைகள், பொது அறிவு புத்தகங்கள் என நுற்றுக் கணக்கான பத்தகங்களை ஒன்றிணைத்து காவலர்களுக்கான நூலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் ஆயுதப்படை டிஎஸ்பி சுப்பாராமன், இன்ஸ்பெக்டர் அசோகன், சப்.இன்ஸ்பெக்டர் கள், ஏட்டுகள், போலீசார், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் காவலர் குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர்.