×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சைவ சமய அர்ச்சகர் பயிற்சி வகுப்பில் சேர கால அவகாசம் நீட்டிப்பு இணை ஆணையர் தகவல்

திருவண்ணாமலை, ஜன.5: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சைவ சமய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேர கால அவசாகம் நீட்டிக்கப்பட்டு வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இணை ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் தெரிவித்திருப்பதாவது: சாதி வேறுபாடு இல்லாமல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராக உருவாக்குவதற்காக, பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில சைவ சமய மற்றும் வைணவ சமய பயிற்சி பள்ளிகள் தொடங்க இந்து சமய அறநிலையத்துறை அனுமதித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சைவ சமய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி இந்த ஆண்டு தொடங்கப்படுகிறது. அதில், 40 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர், இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். மேலும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 14 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு இலவச உணவு, தங்குமிடம், சீருடை, மாதம் ₹3 ஆயிரம் உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைந்த நிலையில், வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கான விண்ணப்பங்களை அண்ணாமலையார் கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அறநிலையத்துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Annamalaiyar Temple ,Thiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை...