×

பள்ளிப்பட்டு அருகே முதல் முறையாக கிராமங்களுக்கு பஸ் இயக்கம்: எம்எல்ஏ ெதாடங்கி வைத்தார்

பள்ளிப்பட்டு:  திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வெங்கல்ராஜ்குப்பம், திருமல்ராஜ்பேட்டை, படுதளம், அருந்ததி காலனி ஆகிய  4  கிராமங்களுக்கு போக்குவரத்து வசதிக்காக கிராம மக்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்தனர். சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பிரதான சாலைக்கு பயணிக்க வேண்டிய நிலையில் பள்ளி கல்லூரி மாணவர்கள், பெண்கள், முதியோர் உட்பட கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.  

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.சந்திரன் கிராம மக்களுக்கு உறுதி கூறியிருந்தார். அதனை ஏற்று  வெங்கல்ராஜ்குப்பத்திலிருந்து பள்ளிபட்டு, பொதட்டூர்பேட்டை மார்கத்தில் திருத்தணிக்கு அரசு பேருந்து சேவையை திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி முன்னிலையில் எஸ்.சந்திரன் எம்எல்ஏ நேற்று தொடங்கி வைத்தார். முதல் முறையாக  கிராமத்திற்கு போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால் கிராம மக்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு வந்து பேருந்துக்கு பூஜை செய்து மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

இதனையடுத்து, வெங்கல்ராஜ்குப்பத்திலிருந்து தனது முதல் பயணத்தை தொடங்கிய அரசு பேருந்தில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட திமுக பொறுப்பாளர் உட்பட கிராமமக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியோடு பயணத்தை தொடங்கினர். பல ஆண்டுகள் காத்திருப்பு நிறைவேற்றி வைத்த சட்டமன்ற உறுப்பினர், தமிழக அரசுக்கு கிராம மக்கள் தங்களது நன்றியை தெரிவித்து கொண்டனர்‌. இதேபோல், பொதட்டூர்பேட்டை பொதுமக்கள் கோரிக்கை ஏற்று தடம் எண் 201 சென்னை திருப்பதி பேருந்தை பொதட்டூர்பேட்டை மார்கத்தில்   கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேருந்துகள் தொடக்க விழாவில், அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜி.ரவீந்திரா, வழக்கறிஞர் சி.ஜே.சீனிவாசன், என்.கிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பி.ரவீந்திரநாத், திருத்தணி நகர செயலாளர் வினோத்குமார், பேரூர் செயலாளர்கள் டி.ஆர்.கே,பாபு,  ஜோதிகுமார், கட்சி நிர்வாகிகள் உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Pallipattu ,MLA ,
× RELATED பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு