ஸ்ரீ பெரும்புதூர்: ஸ்ரீ பெரும்புதூர் ஒன்றியம் பாப்பாங்குழி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மண்புழு இயற்கை உரம் தயாரித்தல் கூடம் உள்ளது. இந்த ஊராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை மட்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து இந்த கூடத்தில் உரம் தயாரிக்கப்படுகிறது. இதேபோல், மரக்கன்று நடவு பணி நடக்கிறது. இந்த பணிகளை ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் இயக்குனர் ராஜஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர், ஊராட்சியில் புதிதாக கட்டப்படும் சமுதாய நலக்கூடம் கட்டிடத்தையும் பார்வையிட்டார். பின்னர் நூலக கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம சேவை மையம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டபட்டுள்ள வீடுகள், ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சேர்ந்தமங்கலம் ஊராட்சி விட்டவிடாகை கிராமத்தில் தமிழக அரசின் பெரியார் சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை கூடுதல் இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன், காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் தேவி, செயற்பொறியாளர் அருண், பெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பவானி, மாவட்ட துணை அமைப்பாளர் பொடவூர் ரவி உள்பட பலர் இருந்தனர்.