குறிஞ்சிப்பாடி, ஜன. 4: வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில், தைப்பூசப் பெருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் சத்திய ஞான சபையில் வரும் 17ம் தேதி தைப்பூசப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மறுநாள்(18ம்தேதி) தைப்பூசப் பெருவிழா நடக்கிறது. இதற்காக கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, ஜோதி தரிசனத்தை கண்டு வழிபட்டு செல்வர். இதற்காக, கோயில் நிர்வாகம், காவல்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி, தீயணைப்பு துறை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து ஏற்பாடுகளை மேற்கொள்வது வழக்கம். அதன்படி, சத்திய ஞான சபை நிர்வாகம் பந்தல் அமைத்தல், குடிநீர் மற்றும் கழிவறை ஏற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்துள்ளது. அதில், சபையின் முன் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. அதேபோல், சபை முழுவதும் புதிய வண்ணப்பூச்சுகள் பூசும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், சத்திய ஞான சபை பொலிவு பெறத் தொடங்கியுள்ளது.