நாகை, ஜன.4: நாகை மாவட்டத்தில் 25 ஆயிரம் இளம் சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனைத் தொடர்ந்து நேற்று முதல் 15 வயது முதல் 18 வயதிற்கான இளம் சிறார்களுக்கான கோவக்சீன் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து நாகையில் நடராஜன் தமயந்தி உயர்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 15 வயது முதல் 18 வயதிற்கான இளம் சிறார்களுக்கான தடுபபூசி போடும் முகாமை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 144 பள்ளிகளில் 25 ஆயிரத்து 89 இளம்சிறார்கள் அதாவது 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்கள் பயில்கின்றனர். இவர்கள் 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை பிறந்தவர்கள். இவர்களுக்கான கொரோனா வைரஸ் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 50 பள்ளிகளில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது என்றார். இதை தொடர்ந்து நாகை இஜிஎஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் 2 ஆயிரத்து 500 மாணவ, மாணவிகளுக்கு ஒரே நேரத்தில் தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் தடுப்பூசி செலுத்தி கொண்ட மாணவ, மாணவிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் டிபன்பாக்ஸ் பரிசு பொருளாக கொடுக்கப்பட்டது. எம்எல்ஏக்கள் கீழ்வேளூர் தொகுதி நாகைமாலி, நாகை தொகுதி முகமது ஷாநவாஸ், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் விஜயகுமார், முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.