நெல்லை, ஜன.3: நெல்லை அருகே மீன்வலையில் சிக்கிய மலைபாம்பை வனத்துறையினர் நேற்று பத்திரமாக மீட்டனர். நெல்லை அருகே மேலச்செவல் குளத்தில் மீன்பிடிக்கும் பணிகள் நேற்று நடந்தன. அப்போது மீன்வலையில் திடீரென மலைபாம்பு சிக்கியது. இதை கண்ட அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின் பேரில், நெல்லை வனச்சரகர் கருப்பையா, வனக்காப்பாளர் மதியழகன், உயிரியலாளர் கந்தசாமி, வனக்கால்நடைத்துறை ஆய்வாளர் அர்னால்டு ஆகியோர் அடங்கிய குழு அப்பகுதிக்கு விரைந்து சென்று மலைபாம்பு மீட்கும் பணியில் இறங்கியது. 5 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு, வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.