ஈத்தாமொழி, ஜன.3: ராஜாக்கமங்கலம் அருகே மேலசங்கரன் குழியைச் சேர்ந்தவர் வரதராஜன். கணபதிபுரம் கன்னக்குறிச்சியில் தும்பு ஆலை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தும்பு ஆலை அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து அதிகமாக புகை வந்துள்ளது. உடனே பொது மக்கள் சென்று பார்த்தனர். அப்போது வரதராஜன் தும்பு ஆலை முன் குவித்து வைக்கப்பட்டிருந்த கழிவு தும்புகள் மளமளவென்று எரிந்துகொண்டிருந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். திங்கள்சந்தை, குளச்சல் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைக்க போராடினர். இரவு நேரமானதாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தொடர்ந்து நாகர்கோவிலில் இருந்து தீயணைப்பு வாகனம் கொண்டுவரப்பட்டது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீரர்கள் தீயை அணைத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். எரிந்த தும்பின் மதிப்பு சுமார் 1 லட்சம் இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த ஆலையில் கடந்த 5 ஆண்டுகளில் நான்கு முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.