×

கலெக்டர் ஆபீசை குண்டு வீசி தகர்ப்பதாக மிரட்டியவர் கைது

ஓட்டப்பிடாரம், ஜன. 1: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்த்து விடுவதாக தொலைபேசியில் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கொல்லங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் அனீஸ் என்ற பூலுடையார்‌‌ (34). இவர் ஒட்டநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆம்புலன்சில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், இதுகுறித்து அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, சரிவர பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அனீஸ், சென்னையில் உள்ள மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, தனக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்றால் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்த்து விடுவேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.இதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்த தொலைபேசி எண்ணை வைத்து நாரைக்கிணறு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அனீஸ் தான் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனீசை கைது செய்து பேரூரணி சிறையில் அடைத்தனர்‌.

Tags : Collector's Office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்