×

ஆலங்குளம் அருகே உப்புபட்டி ஓடையில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

சிவகாசி, ஜன. 1: வெம்பக்கோட்டை ஒன்றியம் உப்புபட்டியில் தரை பாலம் உள்ளது. புளிப்பாறைபட்டி, கிளியம்பட்டி, மம்சாபுரம், காக்கிவாடன் பட்டி பகுதி கிராமங்களில் பெய்யும் மழைநீர் வைப்பாற்று ஓடை வழியாக உப்புபட்டியை கடந்து வெம்பக்கோட்டை அணை பகுதிக்கு செல்கிறது. மழைக்காலங்களில் இந்த ஓடையில் 6 அடி வரை வெள்ள நீர் கரைபுரண்டு ஓடும். கடந்த மாதம் பெய்த மழையால் உப்புபட்டி ஓடையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் இப்பகுதியில் 4 நாட்கள் பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வெம்பக்கோட்டை, புளிப்பாறை பட்டி மாற்று பாதை வழியாக வாகனங்கள் சென்று வந்தன. உப்புபட்டி ஓடை ஆலங்குளம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

எட்டாக்காபட்டி, எதிர்கோட்டை, உப்புபட்டி, காக்கிவாடன் பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து மாணவ மாணவிகள் சைக்கிளில் பள்ளி செல்கின்றனர். மழை காலங்களில் மாணவர்கள் இந்த ஓடையை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். உப்புபட்டி ஓடை ஆலங்குளம் சாலையில் இருந்து 4 அடி பள்ளத்தில் உள்ளது. சாலை மேட்டு பகுதியில் உள்ளதால் மழை நீர் 2 அடி சென்றால் கூட வாகனங்கள் ஓடையை கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே உப்பு பட்டி தரை பால ஓடையில் மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Uppupatti ,Alangulam ,
× RELATED அமராவதி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி