காரைக்குடி, ஜன. 1: காரைக்குடி தொழில் வணிகக்கழக 6வது செயற்குழு கூட்டம் நடந்தது. பொருளாளர் சரவணன் வரவேற்றார். தலைவர் சாமிதிராவிடமணி தலைமை வகித்தார். செயலாளர் லயன்ஸ் கண்ணப்பன், துணைத்தலைவர்கள் காசிவிசுவநாதன், ராகவன், இணைச்செயலாளர் நாச்சியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 70க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்ட தமிழ்வளர்ச்சித்துறை நடத்திய திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 1330 குறளையும் 90 நிமிடத்தில் ஒப்புவித்து தமிழகஅரசின் பரிசு பெற்ற மகரிஷிபள்ளி மாணவர் பிரவீனை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
காரைக்குடி ரயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து துவங்க வேண்டும். பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து கல்லூரிகள், பல்கலைக்கழகம் வழியாக செல்லும் அனைத்து நகரபஸ்களும் ரயில்நிலையம் செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைச்செயலாளர் கந்தசாமி நன்றி கூறினார்.