×

பாதுகாப்பு பணியில் 900 போலீசார் ஓட்டல்கள், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதி மீறினால் கைது செய்ய எஸ்பி உத்தரவு

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தற்போது கொரோனா நோய் தொற்றின் புதிய வடிவான ஒமிக்ரான் பரவி வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, மாவட்ட கலெக்டர் உணவகங்கள், தங்கும் விடுதிகள், விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் இன்று (31ம் தேதி) இரவு ஆங்கிலப் புத்தாண்டு விழா கொண்டாட அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளார். எனவே இந்த பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை.

மேலும், புத்தாண்டையொட்டி இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகளங்களில் சாலையில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இன்று இரவு முதல் மாவட்டத்தில் 93 முக்கிய இடங்களில் பாதுகாப்பு சோதனை சாவடிகளும், 33 இருசக்கர வாகன ரோந்துகள், 11 வாகன சோதனை சாவடிகள் அமைத்தும் போலீசார் கண்காணிக்க .ள்ளனர். கொல்லிமலை செல்லும் வழிகளில், காரவள்ளி, முள்ளுக்குறிச்சி ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், அசம்பாவிதம் இன்றியும் கொண்டாட வேண்டும். மாவட்டம் முழுவதுமாக 900 போலீசார் மற்றும் 200 ஊர்காவல் படையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

பரமத்திவேலூர்: பரமத்திவேலூர் பகுதியில் இன்று (31ம்தேதி) இரவு புத்தாண்டு கொண்டாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பரமத்திவேலூர் டிஎஸ்பி ராஜாரணவீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி இன்று இரவு இளைஞர்கள், பொதுமக்கள் ரெசிடென்சி ஹோட்டல்கள்,  தாபாக்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்றாக கூட்டமாக கூடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது
வழக்கம்.

தற்போது கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி பொது  இடங்களில் கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதியளிக்கும் ஹோட்டல்கள், தாபாக்களின் உரிமையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். நள்ளிரவு மது அருந்திவிட்டு டூவீலர்களில் வலம்வந்தால், வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் வழக்குப்பதிவு செய்யப்படும். எனவே பொதுமக்கள் புத்தாண்டை தங்களது வீடுகளில் இருந்தபடியே கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : SP ,New Year ,
× RELATED போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற...