×

விபத்துக்களை தவிர்க்க கல்லட்டி மலைப்பாதையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை

ஊட்டி:  நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் மலை பகுதிகளில் அமைந்துள்ளன. ஊட்டியில் இருந்து முதுமலை மற்றும் மைசூருக்கு கல்லட்டி, மசினகுடி மலைப்பாதை மலைப்பாங்கான சாலையாகவும், கொண்டை ஊசி வளைவுகள் அதிகம் கொண்டதாகவும் உள்ளன. இதனால் சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் சிலர்  மலைப்பாதைகளில் வாகனங்களை இயக்கத் தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கிக்  கொள்கின்றனர்.இச்சாலையில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க போலீசார் அறிவுறுத்தினாலும் அதனை கண்டுகொள்ளாமல் சில சுற்றுலா பயணிகள்  வாகனங்களை வேகமாக இயக்கி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இதனை தவிர்க்க காவல்துறை தற்போது இப்பாதையில் வெளி மாநிலம் மற்றும் வெளியூர் வாகனங்களை இயக்க தடை விதித்துள்ளது.

இருந்தபோதிலும், ஒரு சிலர் இந்த பாதையில் செல்ல முற்படுகின்றனர். மேலும், உள்ளூர் வாகனம் எனக் கூறி இப்பாதையில் செல்கின்றனர்.  புத்தாண்டு விடுமுறையை கொண்டாட வரும் பலரும் முதுமலை, மசினகுடி போன்ற பகுதிகளுக்கு அதிகளவு செல்கின்றனர். சிலர் கல்லட்டி மலைப்பாதையில் செல்ல ஆர்வம் காட்டி வருகினறனர். எனவே, இச்சாலையில் விபத்துக்களை தவிர்க்க வெளியூர் மற்றும் வெளி மாநிலங்கள் செல்வதை தடுக்க காவல்துறையினர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Kallatti hill station ,
× RELATED கோவையில் இன்று வைகோ பிரசாரம்