×

கரூர் மாநகராட்சி பகுதியில் வீடுகளில் இயற்கை உரம் தயாரிக்கும் பொதுமக்களுக்கு பரிசு

கரூர், டிச. 31: கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை ஜீவா நகர், யசோதா நகர், மக்கள் பாதை ஆகிய பகுதிகளில் நேரில் சென்று துப்புரவு பணி மற்றும் சுகாதார பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது பொதுமக்களிடம் வீடுகளில் வீணாக கூடிய அழுகிய காய்கறிகள், குப்பைகள், வீட்டில் உள்ள மரம் செடி கொடிகள், இலைகள், உணவுக் கழிவுகள், கோழி முட்டைக் கூடுகள் ஆகியவற்றைக் கொண்டு கம்போசிங் முறையில் உரம் தயாரிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் தாந்தோணிமலை அடுத்த யசோதா நகரில் குடியிருக்கும் விஜயலட்சுமி என்ற பெண் தங்கள் வீட்டில் உள்ள உணவுக் கழிவுகள் மற்றும் குப்பைகளை ஒன்றாக வீட்டில் சேர்த்து வீட்டிலேயே கம்போசிங் முறையில் இயற்கையான உரம் தயாரித்து அந்த உரத்தை கொண்டு வீடுகளில் வீட்டு தோட்டம் அமைத்துள்ளார். அந்த வீட்டு தோட்டத்தில் கத்தரி ,தக்காளி, வெண்டை ,மல்லி, மிளகாய் ஆகிய செடிகளை பயிர் செய்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார். இதனை ஆய்வின்போது பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் வீட்டிலேயே இயற்கையான முறையில் உரம் தயாரித்த அந்தப் பெண்ணை பாராட்டி பரிசு வழங்கினார்.

மேலும் வீடுகளில் பொதுமக்கள் காய்கறிகள் உணவுக் கழிவுகள் மற்றும் மக்கும் குப்பைகளை ஒன்றாகச் சேர்த்து வீடுகளில் இயற்கையான உரம் தயாரித்து வீட்டு தோட்டம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இவ்வாறு வீடுகளில் இயற்கையான முறையில் உரம் தயாரிப்பதால் நகராட்சிக்கு குப்பை சேகரிக்க தனியாக ஆட்கள் அமர்ந்த தேவையில்லை .இதனால் பொதுசுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது இதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் வீட்டிலேயே இயற்கையான முறையில் உரம் தயாரிக்க வேண்டும் என்றும், வீடுகளில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு உரம் தேவைப்பட்டால் மாநகராட்சியை தொடர்பு கொண்டால் இயற்கை உரம் வழங்கப்படும் என்றார். ஆய்வின்போது சுகாதார அலுவலர் லட்சிய வர்ணா உடன் சென்றார்.

Tags : Karur Corporation ,
× RELATED கரூர் மாநகராட்சி அலுவலகம் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்