கரூர், டிச. 31: பிறந்து மூன்று நாட்கள் ஆன பெண் சிசு ஒன்று காந்திகிராமம் நகராட்சி அலுவலகம் அருகில் உயிருடன் இருப்பதாக கடந்த 14ம்தேதி அன்று 108 என்ற எண்ணிற்கு தகவல் வரப்பெற்றது. அந்த இடத்திற்கு சென்று சிசுவை காவல்துறையினர் மற்றும் சமூக நல அலுவலர் அடங்கிய குழு பொதுமக்கள் முன்னிலையில் குழந்தையை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். குழந்தைக்கு மூச்சுத் திணறல் இருந்த காரணத்தினால் தொடர் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது. தற்போது குழந்தை நல்ல நிலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர், குழந்தையை சிறார் நீதிச்சட்டம் 2015ன் கீழ் பதிவு பெற்ற பெத்தேல் தத்துவள குழந்தை மையத்தின் இயக்குநர் எபிநேசரிடம் ஒப்படைத்தார்.முன்னதாக, அந்த பெண் குழந்தைக்கு தமிழினி என கலெக்டர் பெயர் சூட்டி மகிழ்ந்தார். மேலும், நல்ல முறையில் குழந்தையை பாதுகாக்க வேண்டும் என தத்துவள மைய இயக்குநருக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்வில், மாவட்ட சமூக நல அலுவலர் உமையாள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.