நாகை, டிச.30: தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் பண்ணை குட்டைகளில் கூட்டு மீன்வளர்ப்பு செய்ய விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்நாட்டு மீன் வளர்ப்பினை ஊக்குவித்திடவும் மற்றும் மீன் உற்பத்தியினை பெருக்கவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பண்ணைக் குட்டைகளில் கூட்டு மீன்வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பினை ஊக்குவித்திட மானியம் வழங்கப்படுகிறது. நாகை மாவட்டத்தில் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் ஏற்கனவே 1000 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளை புனரமைத்திடவும் மற்றும் கூட்டு மீன்வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பினை மேற்கொள்ள ஆகும் உள்ளீட்டு செலவினம் மொத்த தொகை ரூ.62 ஆயிரத்து 500ல் 40 சதவீதம் மானியமாக அதாவது ரூ.25 ஆயிரம் மட்டும் மானியமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்களில் மூப்பு நிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும். எனவே இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் மீன்வளர்ப்பு விவசாயிகள் நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், நாகை (தெற்கு) அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன்பெறுலாம் என தெரிவித்துள்ளார்.