கடலூர், டிச. 30: தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில், மாநகராட்சி மன்ற உறுப்பினர் பொறுப்புகளுக்கு போட்டியிட தி.மு.க. சார்பில் விருப்ப மனு பெறப்பட்டது. இதை தொடர்ந்து கடலூர் மாவட்ட திமுக செயலாளரும், வேளாண்மைத் துறை அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் கடலூர் மாநகராட்சி திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. ஐயப்பன் எம்எல்ஏ, தேர்தல் பணிக்குழு செயலாளர் இள புகழேந்தி, மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, பொருளாளர் குணசேகரன், நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் காசிராஜன் ஆகியோர் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தினர். இந்த நேர்காணலில் விருப்ப மனு அளித்த திமுகவினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.