×

திமுக பெண் கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை மதுராந்தகம் அருகே பரபரப்பு

மதுராந்தகம், டிச.28: மதுராந்தகம் அருகே ஒன்றிய திமுக பெண் கவுன்சிலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஒழுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா (35). செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவரது, கணவர் செந்தில். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அலுவலராக பணியாற்றுகிறார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மதுராந்தகம் ஒன்றியம் 15வது வார்டில், ரேணுகா சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர், திமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், நேற்று காலை ரேணுகா, வீட்டில் தூக்கிட்டு சடலமாக கிடந்தார். இதை கண்டு அவரது கணவர் அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து, மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். அதில், குடும்ப பிரச்னை காரணமாக ரேணுகா தற்கொலை செய்து  கொண்டது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : DMK ,Madurantakam ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி