கும்பகோணம்,டிச.28: கும்பகோணம் மகாமககுளம் பகுதியில் மணிக்கூண்டு அருகே உள்ள சித்தி விநாயகர் கோயில் முன் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அகில பாரத இந்து ஆன்மீக பேரவை சார்பில் கும்பகோணம் ஆர்டிஓவிடம் மனு அளிக்கப்பட்டது. அகில பாரத இந்து ஆன்மீக பேரவை மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் கண்ணன் கும்பகோணம் ஆர்டிஓவிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவில் நகரமான கும்பகோணத்தில் மகாமக குளம் பகுதியில் உள்ள மணிக்கூண்டு அருகே சித்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் முன் சிலர் கடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். கோயிலின் முன்பு ஆக்கிரமித்து வைக்கப்படும் கடைகளை அகற்ற வலியுறுத்தி இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய எந்தவித தடையும் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.