×

வருசநாடு அருகே தார்ச்சாலை அமைக்க மக்கள் கோரிக்கை

வருசநாடு, டிச. 27:  வருசநாடு அருகே, மலைக்கிராமங்களுக்கு சாலை வசதியில்லாததால், போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு அருகே, தும்மக்குண்டு ஊராட்சியில் காந்தி கிராமம், முத்துநகர் உள்ளிட்ட பல மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் போதிய சாலை வசதி இல்லாததால், பொதுமக்கள் போக்குவரத்திற்கு சிரமப்படுகின்றனர். மேலும், இப்பகுதியில் விளையும் தக்காளி, கத்தரி, அவரை, எலுமிச்சை, இலவம்பஞ்சு, கொட்டை முந்திரி உள்ளிட்ட விளைபொருட்களை தேனி, ஆண்டிபட்டி மதுரை ஆகிய நகரங்களில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்ல சிரமப்படுகின்றனர்.

மலைக்கிராமங்களில் உள்ள சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், டூவீலர்களில் செல்ல அவதிப்படுகின்றனர். தார்ச்சாலை அமைப்பது தொடர்பாக தும்மக்குண்டு ஊராட்சி சார்பில் கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதுகுறித்து காந்திகிராமம் சின்னுக்காளை கூறுகையில், ‘மலைக்கிராமங்களில் சாலை வசதி இல்லாததால் அவதிப்படுகிறோம். விளை பொருட்களை மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் மலைக்கிராமங்களுக்கு தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Varusanadu ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்