தொண்டி, டிச.27: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை போட்டு ஒரு மண்டலம் அதாவது 41 நாள் விரதம் பூர்த்தி அடைவதை முன்னிட்டு நேற்று மண்டல பூஜை விழா தொண்டி அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நடைபெற்றது. தொண்டி சிவன் கோவிலில் காலை முதல் பக்தர்களின் கூட்டு பிரார்த்தனையான பஜனை நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் தங்களது உடல்களில் வண்ண பொடிகளை பூசி ஆடி பாடி பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும் நடந்தது.
அதனை தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு ஆராட்டு விழா, பால், தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள், விபூதி, தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான திரவியங்களால் சுவாமிக்கு அபிசேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. சேவா சங்கம் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்கள் மற்றம் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.