சென்னை, டிச.27: மயிலாப்பூர் கன்னிலால் தெருவை சேர்ந்தவர் லாரன்ஸ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜான்சி. லாரன்சின் அம்மா கடந்தாண்டு மரணமடைந்தார். அவரது முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க, கடந்த 24ம் தேதி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரம் சென்றனர். இந்நிலையில், நேற்று காலை இவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்படு திறந்து கிடந்தது. அதே பகுதியில் வசிக்கும் ஜான்சியின் தாய் இதுபற்றி அறிந்து, உடனடியாக மகள் வீட்டிற்கு சென்று பார்த்தார்.
அப்போது, பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 25 தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மற்றொரு லாக்கர் உடைக்கப்படவில்லை. இதனால், அதில் இருந்த நகைகள் தப்பியது. இதுகுறித்து ஜான்சியின் தாய் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.