பல்லாவரம், டிச.27: அனகாபுத்தூர், அன்னை பில்டர்ஸ் பகுதியில் வசிப்பவர் திருப்பதி. இவரது மகன் திவின்குமார் (10), அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான். இச்சிறுவன், நேற்று அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் (13) மற்றும் அஸ்வின் (13) ஆகியோருடன் பாரிநகரில் உள்ள காலி இடத்தில் கிரிக்கெட் விளையாடியபோது, அங்குள்ள குட்டை அருகே பந்து விழுந்துள்ளது. இதை எடுக்க சிறுவன் யுவராஜ் சென்றபோது, அவனது செருப்பு குட்டையில் விழுந்துள்ளது. அதை எடுக்க முயன்றபோது, தவறி குட்டையில் விழுந்துள்ளான்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த திவின்குமார் மற்றும் அஸ்வின் ஆகியோர், நீரில் தத்தளித்த யுவராஜை கை கொடுத்து காப்பாற்ற முயன்றனர். அப்போது, அவர்களும் தவறி குட்டையில் விழுந்தனர். 3 சிறுவர்களும் தண்ணீரில் தத்தளித்து உயிருக்கு போராடினர். அவர்களது அலறல் கேட்டு திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக குட்டையில் இறங்கி யுவராஜ் மற்றும் அஸ்வினை மீட்டனர். திவின்குமார் மட்டும் நீரில் மூழ்கினான்.
தகவலறிந்து வந்த தாம்பரம் தீயணைப்பு மற்றும் மீட்புபடையினர், குட்டையில் உள்ள தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றி விட்டு, சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு திவின்குமார் உடலை மீட்டனர். சங்கர் நகர் போலீசார், சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் தண்ணீரில் விழுந்து உயிர் பிழைத்த சிறுவர்கள் யுவராஜ் மற்றும் அஸ்வினை சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.