தரங்கம்பாடி, டிச.27: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பொங்கலுக்கு மண்பானை செய்யும் பணியில் தொழிலாளார்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மண்பானை செய்ய சிரமமின்றி மண் எடுக்க அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தரங்கம்பாடி அருகே உள்ள எருக்கட்டாஞ்சேரியில் 6 குடும்பத்தை சேர்ந்தவர்கள் பரம்பரை பரம்பரையாக மண் பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டாக கொரோனா ஊரடங்கால் தொழில் முடங்கி விட்டதாகவும், இப்பொழுது தான் மண்பாண்டம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு இருப்பதாகவும், அதற்காக மண் எடுத்து வருவதில் வருவாய் துறை, காவல் துறையினரால் சிரமம் ஏற்படுவதாகவும், தடை இல்லாமல் எங்களுக்கு மண் கிடைக்க அரசு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மண் பாண்ட தொழிலாளி மகாலிங்கம் கூறியதாவது. நான் சிறு வயது முதல் மண் பாண்டம் தொழில் தான் செய்து வருகிறேன். காலம் காலமாக எங்கள் குடும்ப முன்னோர்கள் இந்த தொழில் தான் செய்து வந்தனர். எனக்கு வேறு வேலை தொpயாது. கொரோனா ஊரடங்கு ஏற்பட்டதால் எங்கள் தொழில் மிகவும் நசிந்து விட்டது. இப்பொது பொங்கலுக்காக மண் பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் மண் எடுத்து வர வருவாய்துறை மற்றும் காவல்துறையால் சங்கடம் ஏற்படுகிறது. அதனால் எங்கள் தொழில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரால் எந்த தடையும் எந்த சங்கடமும், ஏற்படாமல் மண் எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாங்கள் சூளை அமைக்க அரசின் நிதி உதவி அளிக்க வேண்டும். திமுக அரசு ஏழை, எளிய மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்தி தீர்வு கண்டு வருகிறது. அந்த வகையில் மண் பாண்டம் செய்ய மண் எடுத்து வருவதில் எங்களுக்கு உள்ள சிரமத்தையும் இந்த அரசு போக்க வேண்டும் என்று கூறினார்.