கரூர், டிச.27: கரூர் மாவட்டத்தில் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுறுத்தி உள்ளார். கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்த) சட்டம் 2021 பிரிவு 22ஏ ன்படி அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்களின் பணி நேரத்தில் நின்று கொண்டே பணியாற்றுவதை தவிர்க்கும் வகையில் போதிய இருக்கை வசதிகள் ஏற்படுத்திட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்களது பணியாளர்களுக்கு போதிய இருக்கை வசதி ஏற்படுத்தி தரப்பட வேண்டும். தொழிலாளர் துறை அதிகாரிகளால் தங்களது நிறுவனங்கள் ஆய்வு செய்யும் போதிய இருக்கை வசதிகள் இல்லாதது கண்டறியப்பட்டால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி அரசின் அமலாக்க அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.