ஈரோடு, டிச.25: முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 34வது நினைவு தினத்தையொட்டி ஈரோட்டில் அவரது சிலைக்கு அதிமுகவினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சித் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுக ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் தென்னரசு, சிவசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அண்ணா, பெரியார் ஆகியோரது சிலைகளுக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், பெரியார் நகர் பகுதிச்செயலாளர் மனோகரன், முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணைமேயர் கே.சி.பழனிசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்ட இணைச் செயலாளர் நந்தகோபால் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.