நாகர்கோவில், டிச. 24: அதிமுக ஆட்சி காலத்தில் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இதற்காக உணவகத்தை ஒட்டி காய்கறி கழிவுகள் மற்றும் ஓட்டல்கழிவுகளை கொண்டு மீத்தேன் கேஸ் உற்பத்தி செய்யும் கூடம் தொடங்கப்பட்டது. வடசேரி கனகமூலம் சந்தை மற்றும் வடசேரி பகுதியில் உள்ள ஓட்டல் கழிவுகளை கொண்டு எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் கடந்த சில வருடத்திற்கு முன்பு இந்த மீத்தேன் கேஸ் உற்பத்தி மையம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.
உடனே அது சரிசெய்யப்பட்டு, அப்போது ஆணையராக இருந்த சரவணகுமார் மீண்டும் அதன் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். தற்போது மீண்டும் பழுதாகி எரிவாயு உற்பத்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. இதனால் மீத்தேன் கேஸ் உற்பத்தி கூடம் புதர் மண்டி கிடக்கிறது. இதனை சரிசெய்து மீண்டும் மீத்தேன் கேஸ் உற்பத்தியை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.