திருப்பரங்குன்றம், டிச. 24: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் வழங்கிய உண்டியல் காணிக்கை மாதத்திற்கு ஒருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோயில் துணை ஆணையர் (பொ) ராமசாமி, உதவி ஆணையர் விஜயன், மீனாட்சி அம்மன் கோயில் கண்காணிப்பாளர் ஜெயதேவி மற்றும் கோயில் ஊழியர்கள், வேதபாடசாலை மாணவர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரொக்கமாக ரூ.21 லட்சத்து 18 ஆயிரத்து 923ம், தங்கம் 134 கிராமும், வெள்ளி 1 கிலோ 80 கிராமும் இருந்ததாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.