நீடாமங்கலம், டிச.24: மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு 35 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் நாள்தோறும் அதிகாலை சுமார் 4.40 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையம் வருவது வழக்கம். நேற்று அதிகாலை 5.15 மணிக்குத்தான் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. 35 நிமிடம் தாமதமாக ரயில் வந்ததால் ரயிலிலிருந்து இறங்கி தங்கள் ஊர்களுக்கு செல்லும் பேருந்திற்காக பயணிகள் பேருந்து நிறுத்தத்தில் வெகு நேரம் காத்திருந்தனர். சரக்கு ரயில் கிராசிங் காரணமாக நன்னிலம் ரயில் நிலையத்தில் மன்னை எக்ஸ்பிரஸ் ரயில் நீண்டநேரம் நிறுத்தி வைக்கப்பட்டதே காரணம் என கூறப்படுகிறது.