பண்ருட்டி, டிச. 24: பண்ருட்டி அருகே அண்ணாகிராமம் வேளாண்மை அலுவலகத்தில் அட்மா வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் தலைமையில் நடந்தது. பாலூர் காய்கறி ஆராய்ச்சி பண்ணை உதவி பேராசிரியர் செந்தமிழ், பொறியாளர் கண்ணன், தொழில்நுட்ப மேலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அட்மா குழு தலைவராக வெங்கட்ராமன் மற்றும் 26 உறுப்பினர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் சொட்டு நீர்பாசனம் முழுமையாக விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். கரும்பு, நெல் பயிர்களில் அதிக லாபம் ஈட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இரண்டு வருவாய் கிராமங்களுக்கு ஒரு உழவன் நண்பன் செயலியை ஏற்படுத்தி வேளாண்மை திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அட்மா குழு தலைவர் வெங்கட்ராமன் விவசாய கருவிகளை பார்வையிட்டு விவசாயிகளுக்கு தார்பாய், தென்னைமரம் ஏறும் கருவி, நெல் விதைப்பு கருவி ஆகியவற்றை வழங்கினார். இதில் உதவி தொழில்நுட்ப மேலாளர் கமலநாதன் உள்ளிட்ட பலர்கலந்துகொண்டனர்.