தேவாரம், டிச.23: தேவாரம் மேற்கு தொடர்ச்சி மலை ஓரங்களில் அமைந்துள்ள ஊர்களில் மார்கழி பனி கொட்டுவதால் முதியோர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். தேனி மாவட்டம் இயற்கையிலேயே பசுமை படர்ந்த மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி, கோம்பை, தேவாரம், ஆண்டிபட்டி உள்ட்ட ஊர்கள், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் அமைந்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஊர்கள் இயற்கையிலேயே, குளிராக காணப்படும். இந்த மாவட்டத்தில், இந்த ஊர்களில் அதிகமான அளவில் விவசாயம் மிக பிரதானமாக செய்யப்படுகிறது. தோட்ட தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கின்றனர். சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக கடந்த 10 நாட்களாகவே உறை பனி கொட்டுகிறது. அதிகாலையில் பனி மழை போல் கொட்டுவதால் மிக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தேனி மாவட்டத்தில் பனி கொட்டுவதால், முதியவர்கள், நோய்வாய்ப்பட்ட வயதானவர்கள், குழந்தைகள் என மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக வயதானவர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கும் வகையில் பனி கொட்டி வருகிறது. இதேபோல் வீசிங் பிரச்சனை, உள்ளவர்கள் பனியினால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழலில் தவிக்கின்றனர். பனி படர்ந்த இந்த சூழல் மிக புதிய அனுபவம் என்கின்றனர் வயதானவர்கள். வயதானவர்களின் வாழ்க்கையில் மிக இடையூறாக உள்ள இந்தப் பனிமழையினால் மிகுந்த சிரமம் தொடர்கதையாகி வருகிறது. பனிஅதிகம் உள்ள ஊர்களில் காலையில் கொட்டும் பனியால் திண்டாட்டம் தொடர்கிறது. கடந்த 15 நாள் முன்பு வரை இந்த மாவட்டத்தில் அதிகமான அளவில் மழை கொட்டியது. குறிப்பாக, தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் பகுதியில் பெய்த மழையினால் இன்றளவும் கண்மாய்களில் தண்ணீர் உள்ளது. மழை சீதோஷ்ண நிலை மாறுவதற்கு முன்பு இப்போது மார்கழி பனி கொட்டுகிறது. மார்கழி பனியின் கோரத்தாண்டவம் வயதானவர்களை நடுங்க வைக்கிறது. வயதானவர்கள் கம்பளி, அதிக இறுக்கமான ஆடைகளை அணிந்தாலும் கூட நடுநடுங்கி வருகின்றனர். வயதானவர்கள் பாதிக்கப்படும், இந்த அகோர பனியினால் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதனால் வயதானவர்கள் சிரமங்கள் தொடர்கின்றன.