காரைக்குடி, டிச.23: திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிநாடு பகுதியில் வேளாண் கல்லூரி அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காரைக்குடி அருகே திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செட்டிநாடு பகுதியில் வேளாண் கல்லூரி, காரைகுடியில் அரசு சட்டக்கல்லூரி அமைக்கப்படும் என நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது வேளாண் கல்லூரி துவங்க முதன்மை செயலாளர் சமயமூர்த்தி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது:
வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை தற்போது அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில் கிருஷ்ணகிரியில் புதிதாக அரசு தோட்டக் கலைக்கல்லூரி துவங்க அறிவிக்கப்பட்டது. வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி 2021 2022ம் ஆண்டில் கரூர் மாவட்டம், நாகை மாவட்டம் கீழவேளூர், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஆகிய இடங்களில் புதிதாக மூன்று அரசு வேளாண்மை கல்லூரிகள் துவங்கப்படஉள்ளது. இதற்கு மாநில அரசு தலா 10 கோடி வீதம் மொத்தம் 30 கோடி நிதியினை ஒதுக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள், தொழில் வணிக்கழகம், சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.