ஊட்டி, டிச. 23: ஊட்டி அருகேயுள்ள அணிக்கொரை, தேனாடுகம்பை, உல்லத்தி உட்பட 60க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்திற்கு ஊட்டியில் இருந்து ஆடாசோலை, கோழிப்பண்ணை சாலை வழியாக பிரதான செல்கிறது.இந்த சாலையில், கலெக்டர் அலுவலகம் முதல் கோழிப்பண்ணை வரை 5. கி.மீ. தூரம் நகராட்சிக்கு சொந்தமான சாலையாக உள்ளது. அதன்பின், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை உள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலைகள் சீரமைக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளது. ஆனால், நகராட்சிக்குட்பட்ட சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், இந்த வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நகராட்சி வசம் உள்ள சாலையை நெடுஞ்சாலைத்துறை சாலையாக மாற்ற வேண்டும் என ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் வலியுறுத்தியுள்ளார். அவர் தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலுவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட கலெக்டர் அலுவலகம் முதல் கோழிப்பண்ணை வரையில் நகராட்சிக்கு சொந்தமான சாலை உள்ளது. இந்த சாலை பராமரிக்கப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. இதனால், 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கலெக்டர் அலுவலகம் முதல் கோழிப்பண்ணை வரையில் உள்ள சாலையை நெடுஞ்சாலைத்துறை எடுத்து, சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு மாயன் அந்த மனுவில் கூறியுள்ளார்.