கமுதி, டிச.22: கண்ணார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் வருவதற்கு முன்பு மரம் ஒடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவ,மாணவிகள் உயிர்தப்பினர். கமுதி கண்ணார்பட்டியில் அருப்புக்கோட்டை சாலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இது ஓட்டு கட்டிடம் ஆகும். இதில் இப்பகுதியில் உள்ள 18 மாணவிகள்,4 மாணவர்கள் மொத்தம் 22 பேர் இங்கு படித்து வருகின்றனர். 1962ம் வருடம் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தின் முன்பு பூவரச மரம் ஒன்று பல வருடங்களாக உள்ளது. இந்த மரம் நேற்று ஒடிந்து பள்ளியின் கூரை மீது விழுந்தது. அதிகாலையில் மரம் ஒடிந்து விழுந்ததால், காலையில் பள்ளியை சுத்தம் செய்வதற்காக வந்த பணியாளர்கள் இதனை பார்த்து தலைமையாசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். உடன் தீயணைப்பு துறையினர் வந்து மரத்தை அப்புறப்படுத்தினர். அதிகாலையில் மரம் ஒடிந்து விழுந்துள்ளதால், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.