திருமங்கலம், டிச. 22: திருமங்கலத்தில் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. மதுரை- விருதநகர் நான்கு வழிச்சாலையில் மறவன்குளம் கண்மாய் கரையையொட்டி அமைந்துள்ள இக்ல்லூரியில் 350 மாணவ, மாணவியர்கள் படித்துவருகின்றனர். தொடர் மழை, வைகையாற்றிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் மறவன்குளம், உரப்பனூர் கண்மாய்கள் இந்தாண்டு நிரம்பவே ஓமியோபதி கல்லூரியை மழைநீர் சூழ்ந்தது. இதனால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக கல்லூரி மூடப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மழை குறைந்துள்ள நிலையில் தற்போது வரையில் ஓமியோபதி கல்லூரி வளாகத்தினை சூழ்ந்துள்ள மழைநீர் வெளியேறவில்லை. இதனால் கல்லூரியின் கட்டித்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இந்திய மருத்துவம்- ஓமியோபதி துறை இயக்குனர் டாக்டர் கணேசன் திருமங்கலம் ஒமியோபதி கல்லூரியில் ஆய்வு செய்தார்.
கல்லூரியில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்ட அவர் பின்னர் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்களிடம் கலந்துரையாடினர். அப்போது விரிவுரையாளர் கூடம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் தண்ணீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர். மாணவர்கள் மழைநீரினால் கட்டிங்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து மனு கொடுத்தனர். தொடர்ந்து அவர், மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் கல்லூரி இயங்க முடியாது, உடனடியாக மாற்று இடங்களை தேர்வு செய்ய உத்தரவிட்டார். இதுகுறித்து முதல்வர் கார்த்திகேயன் கூறுகையில், ‘தற்காலிகமாக மாற்று இடத்தினை தேர்வு செய்ய இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்’ என்றார்.