×

‘தமிழ் தாய் வாழ்த்து’ பாடலுக்கு மாநில அங்கீகாரம் முதல்வருக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நன்றி

புதுக்கோட்டை, டிச.20: ‘நீராரும் கடலுடுத்த’ பாடலை தமிழ்நாடு மாநிலப்பாடலாக அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவர் ரவி, மாநிலப் பொருளாளர் முருகசெல்வராசன், மாநில பொதுச்செயலாளர் முனைவர் மன்றம் சண்முகநாதன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது: செம்மொழியாம் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள், தங்களது அன்னையை வாழ்த்திப்பாடும் வகையில், போற்றிப் பாடும் நிலையில் பொதுவான பாடல் ஒன்றை மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட வேண்டும் என்று பெருவிருப்பம் கொண்டனர். ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழ்நாட்டு மக்கள் கொண்ட பெருவிருப்பத்தினை ஏற்றுக்கொண்டு, தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் ‘‘நீராரும் கடலுடுத்த” பாடல் தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பது பெரும் வரவேற்புக்குரியதாகும். தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப்பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பு ‘‘தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்” இசைத்தட்டுகள் தவிர்த்து வாய்ப்பாட்டுப் பாடலாக கட்டாயம் பாடப்படும் என்பதும், மாற்றுத்திறனாளிகள் தவிர்த்து மற்ற அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும் பொழுது எழுந்து நின்று மரியாதை செலுத்திடல் வேண்டும் என்பதும் பெரும்மகிழ்ச்சிக்குரியதாகும். ‘‘நீராரும் கடலுடுத்த” தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாக அறிவித்து தமிழ்நாட்டு மக்களின் ஒரு நூற்றாண்டுக்கும் மேலான கனவினை நனவாக்கி உள்ள தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால ஏக்கத்தினைப் போக்கி உள்ள, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு தமிழ்நாடு அரசின் அங்கீகாரமும், அரசு மரியாதையும் ஏற்படுத்தித் தந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரும்நன்றி தெரிவிக்கிறது.

Tags : Primary School Teachers' Council ,State Recognition Chief ,
× RELATED முத்துப்பேட்டை ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயற்குழு கூட்டம்