×

நாகை உழவர்சந்தை மயிலாடுதுறை அருகே கனமழையின்போது அறுந்த மின்கம்பியை சரிசெய்யாததால் தண்ணீரின்றி வெடிப்போடும் வயல்கள்

மயிலாடுதுறை, டிச.20: மயிலாடுதுறை அருகே அறுந்து விழுந்த மின்கம்பியை மின்சாரத்துறையினர் சரி செய்யாததால் மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சம்பா நெற் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கொற்கை ஊராட்சியில் 500 ஏக்கர் பரப்பில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த கடந்த மாதம் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டு கொற்கை பகுதியில் டிரான்ஸ்பார்மரில் இருந்து வரும் மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. விவசாய பணிக்காக உள்ள 8 மின் மோட்டார்களை இயக்க முடியாததால் 25 ஏக்கர் நெற்பயிர்களுக்கு விவசாயிகளால் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. தண்ணீரின்றி வறட்சியால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு சம்பா பயிர்கள் கருகி வருகிறது.

அறுந்து விழுந்த மின்கம்பியை இதுவரை சரி செய்யவில்லை. ஏற்கனவே மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பயிர்களுக்கு உரமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக பயிர்களை விவசாயிகள் காப்பாற்றி வந்த நிலையில் மீண்டும் 25 ஏக்கரில் பயிர்கள் கருகி வரும் நெற்பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 2 மாத நெல் பயிர்கள் கதிர் கட்டும் நிலையில் காய்ந்து கருகி வருவதால் மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக அறுந்து விழுந்த மின்கம்பியை சரி செய்து தங்குதடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து நீடூர் உதவி மின் பொறியாளர் மூர்த்தி கூறுகையில், ஏராளமான மரங்களின் கிளைகள் முறிந்து மின்கம்பியில் விழுவதால் மரக்கிளைகள் வெட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், இதனால் மின் இணைப்பு வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும், விரைவில் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Tags : Naga Uzhavarsanta Mayiladuthurai ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ